Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM
அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இறையருள் பெற கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத் திட்டத்தின் கீழ் உணவு அளிக்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப் பட்டு வருகிறது.
முந்தைய காலகட்டங்களிலும் கோயில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இதை பின்பற்றியே, கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கோயில்கள் சார்பில் 44 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப் பட்டன.
கோயில்களில் பிரசாதம், அன்னதான உணவு ஆகியவை தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய,இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்று, அனைத்து முதுநிலை கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.
தற்போது பழநி தண்டாயுதபாணி, ரங்கம் அரங்கநாதர் ஆகிய 2 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் பயன்பெறும் நோக்கில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆகிய 3 கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று கடந்த 4-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலமாக, 3 கோயில்களிலும் தினமும் சுமார் 7,500 பக்தர்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு பரிமாறப்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, சா.மு.நாசர், தலைமைச் செயலர் இறையன்பு, அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், திருச்சி, தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT