Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயத்தால்கே.சி.வீரமணி வீட்டில் போலீஸார் சோதனை : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி குற்றச்சாட்டு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயத்தால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் காவல்துறையினரைக் கொண்டு திமுக அரசு சோதனை நடத்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்ற முடியாமல் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறது. இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 28 இடங்களில் காவல்துறை மூலம் சோதனை நடத்தியுள்ளனர்.

நிறைவேற்ற முடியாத 505-க்கும்மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிய பிறகும், வெறும்3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியை பிடித்தது.`நீட்’ தேர்வு ரத்து பற்றி மாணவர்களிடம் பொய் செய்திகளை பரப்பிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மீது மக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை மறைக்க அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பெயரில் தனது காவல் துறையினரை ஏவி பலவித இடையூறுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக, உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 2 கட்டமாகத்தான் நடக்கும். ஆனால், வெறும் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்துவதில் இருந்தேதிமுகவின் தோல்வி பயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. இத்தேர்தலை எதிர்த்துநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அதை காரணமாக வைத்துஉள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று திமுகவினர் நினைத்தனர்.

ஆனால், திமுக, ஸ்டாலினின் அதிகார வர்க்கம், குடும்ப ஆதிக்க கூட்டணியை ஜனநாயக முறைப்படி எதிர்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராகஉள்ளோம். தேர்தலில் தங்களுக்குதோல்வி ஏற்படும் என்று சந்தேகப்படும் மாவட்டங்களில், முக்கியநிர்வாகிகளை செயல்பட விடாமல்தடுக்கும் நோக்கத்தின் முதல்படியாக கே.சி.வீரமணி வீட்டில்சோதனை நடத்தி உள்ளனர்.

இத்தகைய சலசலப்புகள், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு அதிமுகவும், அதன் நிர்வாகிகளும், தொண்டர்களும் அடிபணிந்தது இல்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே,இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணையோடு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

அதிமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக்கவும், ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x