Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

அதிமுக ஆட்சியில் 3 அமைச்சர்களுக்கு தொடர்பு - மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அரைகுறையாகச் செயல்படுத்தப்பட்டுஉள்ளதாகவும் அதில் ஊழல் நடந்துஉள்ளதாகவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டம் இன்று (செப்.17) நடக்கிறது. இதற்காக நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டம் நடக்கவுள்ளது. நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அனைத்தும் தவறாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தனி தலைவர் இருக்க வேண்டும். அதே மாதிரி மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். கவுன்சிலர்கள் ஏற்கெனவே இல்லை. எம்எல்ஏக்களை அழைத்து அவர்களை ஆலோசித்து இருக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை கூட அழைத்து ஆலோசனை கேட்கவில்லை.

3 அமைச்சர்கள் ஊழல் செய்து சம்பாதிப்பதற்காகவே அவசர அவசரமாக இந்தத் திட்டம்செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்தத்துறையில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற அடிப்படையிலே ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடந்துள்ளது. அதற்குச் சிறந்த உதாரணம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிலும் பதித்துள்ள பேவர் பிளாக் கற்கள். ஆற்று மணலைத் திருடி எங்குமே கிடைக்காததுபோல் கற்களைக் கொண்டு வந்து சாலை போட்டுள்ளனர். அதனால், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி இருக்கிற சாலைகளையும் கெடுத்து ஊழலுக்காக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர்.

தேவைக்கும், ஜனநாயகத்துக்கும் முரணாக இந்தத் திட்டம் மதுரையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், தொடங்கிய இந்தத் திட்டத்தை வேகப்படுத்தி எதையெல்லாம் சரி செய்ய முடியுமோ அதைசரியாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இத்திட்டத்தில் அனைத்துக் கட்டிடங்களும், சாலைகளும் தரமற்று உள்ளன. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கிய நாள் முதல் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து நிதி தணிக்கை செய்ய வேண்டும். இதில் அதிகாரிகள் மீதான முறைகேடு குறித்து ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் திட்டமிடவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x