Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

சுகாதார விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் :

நாகர்கோவில்: ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில், 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ், 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் செயல்பாடுகள் சுதந்திர தின திருநாள் அமுத பெருவிழாவாக செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு தூய்மை வாகனம் மூலம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களிலுள்ள பொது பகுதிகளில் சுகாதாரம் தொடர்பான குறும்படங்கள் அடங்கிய தொகுப்பு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒளிபரப்பப்படுகிறது.

சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரத்தின் தொடர்நிலை தக்க வைத்தல் போன்றவை தொடர்பான தகவல்களை குறும்படங்களாக பொதுமக்களிடையே திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தனபதி, உதவி திட்ட அலுவலர் சண்முகவள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x