Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

இரு வீடுகளின் பூட்டை உடைத்து 71 பவுன் நகைகள் திருட்டு :

கோவையில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து, 71 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

கோவை சின்னவேடம்பட்டி அருகேயுள்ள, உடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவர், கணபதி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 11-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வால்பாறைக்குச் சென்றிருந்தாா். பின்னர், கடந்த 12-ம் தேதி கோவைக்கு திரும்பினார். வீட்டுக்குச் சென்று பார்த்த போது, கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 51 பவுன் நகை மாயமாகியிருந்தது. மர்மநபர்கள் வீட்டுப் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதேபோல், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் (44). இவர், அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன், பெரம்பலூர் மாவட்டத்துக்குச் சென்றார். இந்நிலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேராசிரியர் ரமேஷூக்கும், சாயிபாபாகாலனி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த வைரத் தோடு, வைரக் கம்மல் உள்ளிட்ட 20 பவுன் நகைகள் மாயமாகியிருந்ததும், அதை மர்மநபர்கள் திருடிச் சென்று இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாயிபாபாகாலனி போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x