Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
மதுரை விமான நிலையத்துக்கு தேவேந்திரன் அல்லது மீனாட்சி பெயர் சூட்டக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை விமான நிலையம் அமைய அதிக அளவு நிலம் வழங்கியவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் மதுரை விமான நிலையத்துக்கு தேவேந்திரன் அல்லது மதுரை மீனாட்சி பெயர் சூட்டக் கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மதுரை விமான நிலையத்துக்கு தேவேந்திரன் அல்லது மீனாட்சி பெயர் சூட்டவும், வேறு பெயர் சூட்ட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில், விமான நிலையத்துக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகே பெயர் சூட்ட முடியும். மதுரை விமான நிலையத்துக்கு பெயர் வைக்க தமிழக அரசு எந்தப் பரிந்துரையும் அனுப்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுபோன்ற மனுக்களை ஊக்கப்படுத்த முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT