Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் கொள்ளை சம்பவம் - விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரை : தமிழக அரசுக்கு காவல்துறை கடிதம்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த சென்சார் குறைபாட்டைப் பயன்படுத்தி நாடு முழுவதும் 14 மாநிலங்களில் ரூ.5 கோடி வரை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.

சென்னையில் கடந்த ஜுன் 18, 19-ம் தேதிகளில் தரமணி, வடபழனி, விருகம்பாக்கம், பெரியமேடு, வேளச்சேரி போன்ற இடங்களில் பல லட்சம் வரை இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னையில் மட்டும் 16 புகார்கள் கொடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவுபோலீஸார், ஹரியாணாவைச் சேர்ந்த அமீரர்ஸ், வீரேந்தர் ராபர்ட்,நஜி முஸைன், சவுக்கத் அலி ஆகியோரைக் கைது செய்தனர். ஆனால், கொள்ளைக் கும்பலின் தலைவன் மற்றும் பலர் தலை மறைவாக உள்ளனர்.

இந்நிலையில், 14 மாநிலங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக உள் துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசின் உள் துறைக்கு, தமிழக உள்துறை விரைவில் அனுப்ப உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x