Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM
தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது தமிழக அரசின் உத்தரவுகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாநில அரசால் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தவும், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் சிலை நிறுவவும், பொது இடங்களில் விழா கொண்டாடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை.
தனிநபர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனி நபர்கள் வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை அருகில் உள்ள ஆலயங்களின் வெளிப்புறத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் வைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இச்சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இதன் மூலம் அபராதம் விதித்தல் அல்லது சிறை தண்டனை வழங்குதல் ஆகிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT