Published : 04 Sep 2021 03:16 AM
Last Updated : 04 Sep 2021 03:16 AM

பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி - செப்.6 முதல் மாதர் சம்மேளனம் பிரச்சாரம் :

கும்பகோணம்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி செப். 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நூறு மையங்களில் பிரச்சார பேரியக்கம் நடத்த மாதர் சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் வசந்திவாசு தலைமையில் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.

மாநிலக் குழு முடிவுகளை விளக்கி, மாவட்டச் செயலாளர் டி.கண்ணகி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பரிமளா, மாவட்டப் பொருளாளர் என்.பிரபா, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் க.கண்ணகி, ச.வசந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பான மசோதா கடந்த 1996-ம் ஆண்டு செப்.12-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, வரும் செப்.12-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இம் மசோதாவை மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, செப்.6 முதல் 12 -ம் தேதி வரை ஒரு வாரகாலம் கோரிக்கை வாரமாக அனுசரிப்பது என்று மாதர் சம்மேளனத்தின் தேசியக்குழு முடிவெடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் செப்.6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நூறு மையங்களில் பிரச்சார பேரியக்கம் நடத்துவது, செப்.7-ல் ஆர்ப் பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இதற்காக ஒரு தனி தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து மாதர் சம்மேளனம் சார்பில் கோரிக்கை மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x