Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM

எம்-சாண்ட் தயாரிப்பு, விற்பனையை முறைப்படுத்த புதிய கொள்கை : பேரவையில் அறிவித்தார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை

எம்-சாண்ட் தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

பேரவையில் தொழில் துறை (சுரங்கங்கள், கனிமங்கள்) மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

சுரங்கங்கள், கனிமங்கள், மேக்னசைட் ஆகிய 3 துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் உள்ளன.அடுத்த பேரவைக் கூட்டத்தின்போது, இந்த 3 துறைகளும் லாபத்தில் இருப்பதை காட்டுவோம்.

திருநெல்வேலியில் மிகப்பெரிய அளவில் தாதுமணல் உள்ளது. அரசு மட்டுமே மணல் குவாரி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால், தாதுமணலை அரசே ஏற்று நடத்தவேண்டி வந்தால், டாமின் நிறுவனம் எடுத்து நடத்தி லாபம் ஈட்டிக்காட்டும்.

குவாரிகளில் நீர் சேகரிப்பு

குத்தகைக் காலம் முடிந்து பயனற்ற நிலையில் உள்ள 436 சுரங்கங்கள், குவாரிகள் கண்டறியப்பட்டு ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரிகளை குடிநீர் வடிகால் வாரியத்திடமோ, உள்ளாட்சி அமைப்புகளிடமோ ஒப்படைத்து, நீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி கோடைகாலங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்படும்.

விதிமுறைகளுக்கு மாறாக கனிமங்கள் எடுப்பதை தடுக்கஆளில்லா சிறிய ரக விமானம்பயன்படுத்தப்படும். இத்திட்டம்ரூ.25 கோடியில் செயல்படுத்தப்படும். குவாரிப் பணிகளில் இருந்துவரலாற்றுச் சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டு, சமணப் படுக்கை,தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும். இச்சின்னங்கள் உள்ள பகுதிகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கப் பணிகள் நடப்பதை தடுக்க கனிம விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும்.

கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீபகாலத்தில் எம்-சாண்ட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தரமற்ற எம்-சாண்ட் சந்தைகளில் விற்பதை தடுக்கவும், கண்காணிக்கவும், தயாரிப்பு, தரம், விலை, கொண்டு செல்லுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்தவும் புதிய கொள்கை உருவாக்கப்படும்.

ஜிப்சம், கனிம ஆய்வு

பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தப்படாமல் குவாரி பகுதியிலேயே மலைபோல குவிந்து கிடக்கும் கிரானைட் கழிவு கற்கள், அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதிக செறிவூட்டப்பட்ட கிராபைட் தயாரிக்க தொழில்நுட்ப ஆய்வுமேற்கொள்ளப்படும்.

சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஜிப்சம் கனிம இருப்பு பகுதிகளைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x