Published : 15 Aug 2021 03:23 AM
Last Updated : 15 Aug 2021 03:23 AM

பலருக்கும் சலுகை கிடைக்க கூடாது என்பதற்காக - கூட்டுறவு சங்க நகைக் கடன் தள்ளுபடியில் நிபந்தனைகள் விதிக்க அரசு திட்டம் : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடியில் பலருக்கும் சலுகை கிடைக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு நிபந்தனைகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சியின் 100 நாள் செயல்பாட்டிலேயே மக்கள் ஏமாற்றம் அடைந்து, விழிபிதுங்கி நிற்கின்றனர். ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 பவுன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்வோம்’ என்று வாக்குறுதி அளித்தவர்கள், இப்போது பசப்பு வார்த்தைகளை பொழிகின்றனர். உயர் கல்விக்காக வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்றுஉறுதி அளித்து வாக்குகளை பெற்றவர்கள், அதை மறந்துவிட்டனர்.

5 பவுன் நகைக் கடன் தள்ளுபடிசலுகை பலருக்கு கிடைக்க கூடாதுஎன்ற அளவுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் பெற்ற அனைவரும், கடன் ரத்தாகும் என்று மகிழ்ச்சி அடைந்த நிலையில், 2018ஏப்ரல் முதல் 2020 வரை பெறப்பட்டநகைக் கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று செய்தி வந்துள்ளது.

நகைக் கடன் தள்ளுபடி பெறவேண்டுமானால், கடன் பெற்றவர் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வாங்கியிருக்கக் கூடாது. ஆண்டுவருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல்இருக்கக் கூடாது. குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற்றிருக்க வேண்டும், மத்திய, மாநில அரசுஊழியராக, கூட்டுறவு சங்க ஊழியராக, வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதனால், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசு அறிவித்தாலும், பலருக்கும் இந்த சலுகை கிடைக்காது. கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மூலம் இதை தெரிந்துகொண்ட மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.

தமிழகத்தின் கடன் எவ்வளவு என்று தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் அறிந்துதான், நிறைவேற்ற முடியாத 505-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக தலைவர் அள்ளி வீசியுள்ளார். ஆனால், அதை நிறைவேற்ற எண்ணம் இல்லாமல், நிதியமைச்சரை வைத்து ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல்செய்துள்ளனர். அந்த அறிக்கையும், ஆண்டுதோறும் வெளியிட்ட நிதி அறிக்கையின் தொகுப்பாகவே உள்ளது.

எனவே, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்களை இனியும் ஏமாற்றாமல், அவர்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு,அதிர்ஷ்டவசத்தால் ஆட்சிக்கு வந்தஇந்த அரசு, தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களையும், 5 பவுன் வரை அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக் கடன்களையும் உடனே தள்ளுபடி செய்ய வேண் டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x