Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள்உண்மையாக இருந்தால், பெகாசஸ்விவகாரம் மிக தீவிர குற்றச்சாட்டாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி 50-க்கும்மேற்பட்ட நாடுகளில் முக்கிய தலைவர்கள் உட்பட 50,000 பேரின் செல்போன் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், 40 செய்தியாளர்கள், 2 மத்திய அமைச்சர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறிய உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் உட்பட 300 பேரின் செல்போன் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மூத்த செய்தியாளர்கள் என்.ராம், சஷி குமார், எடிட்டர்ஸ் கில்ட்ஆப் இந்தியா, மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான்பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான 9 மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்களின் வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா,நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:
ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருந்தால், பெகாசஸ் விவகாரம் மிக தீவிர குற்றச்சாட்டாகும். கடந்த 2019-ம் ஆண்டிலேயே பெகாசஸ் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சினையை எழுப்பாதது ஏன்? பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டதாக கூறும் மனுதாரர்கள் இதுவரை கிரிமினல் புகார் அளிக்காதது ஏன்? அரசு நிர்வாகத்துக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருள் விற்கப்படும் என்றால் மாநில அரசுகளும் இதை வாங்கியிருக்க வாய்ப்புள்ளதே?
இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் சில பொதுநல வழக்குகளாகவும், சில வழக்குகளை பாதிக்கப்பட்டோரும் தொடர்ந்துள்ளனர். மத்திய அரசின்பதில் தெரியாமல் வழக்கு விசாரணையைத் தொடர முடியாது.
வழக்கமான பாணியில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப விரும்பவில்லை. அதேநேரம் அனைத்து மனுதாரர்களும் தங்களின் மனுக்களின் நகல்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் . அடுத்த விசாரணை 10-ம் தேதி நடைபெறும். அப்போது மத்திய அரசு தரப்பும் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT