Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இதன் மூலம் 41 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்ரவி குமார் தஹியா.
ஜப்பானில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவில் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-ஜெர்மனி அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் 17 மற்றும் 34-வது நிமிடங்களில் சிம்ரஞ்சித் சிங்கும், 27-வது நிமிடத்தில் ஹர்திக் சிங், 29-வது நிமிடத்தில் ஹர்மான்பிரீத் சிங், 31-வது நிமிடத்தில் ரூபிந்தர்பால் சிங் ஆகியோரும் கோல் அடித்து அசத்தினர். ஜெர்மனி அணி தரப்பில் திமூர் ருஸ், நிக்லஸ் வெல்லன், பெனடிக்ட் ஃபுர்க், லுகாஸ் விண்ட்ஃபெடர் ஆகியோர் கோல் அடித்தனர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் மனம் தளராமல் போராடிய வீரர்கள் சீரான இடைவெளியில் கோல்கள் அடித்து 5-3 என முன்னிலை பெற்றனர். கடைசி 15 நிமிடஆட்டம் மிகவும் பரபரப்பாக அமைந்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஜெர்மனியின் விண்ட்ஃபெடர் கோல் அடிக்க அந்த அணி 4-5 என நெருங்கியது.
இதன் பின்னர் ஜெர்மனிக்கு மேலும் 3 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவற்றை அற்புதமாக தடுத்து நிறுத்தினார் இந்திய அணியின் கோல்கீப்பர் ஜேஷ். ஆட்டம் முடிவடைய 6 விநாடிகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் ஜெர்மனி அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்பு கிடைத்து. ஆனால் ஜேஸின் தடுப்பு அரணை மீறி ஜெர்மனி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜெர்மனி அணி அந்த பக்கத்தை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது.
இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பதக்கம் வென்றது. கடைசியாக இந்திய அணி 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் 8-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றிருந்தது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1968-ம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக், 1972-ம் ஆண்டு முனிக் ஒலிம்பிக் ஆகியவற்றில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான 57 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரவி குமார் தஹியா 4-7 என்ற கணக்கில் ரஷ்யாவின் ஜாவூர் உகுவேவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான 5-வது பதக்கமாக இது அமைந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரவி குமார் தஹியா. இதற்கு முன்னர்கடந்த 2012-ம் ஆண்டு லண்டன்ஒலிம்பிக்கில் சுஷில் குமார்வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கும், மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தஹியாவுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், பயிற்சியாளர் கிரகாம் ரீட் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT