Published : 05 Aug 2021 03:15 AM
Last Updated : 05 Aug 2021 03:15 AM

பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசின் ஆணவப் போக்கு : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி

பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு ஆணவப் போக்குடன் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு முடக்கிவருகின்றன. இந்நிலையில், பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் உட்பட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசு ஆணவப் போக்குடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு தவறான பிரச்சாரத்தை மேற்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது அரசு குற்றம்சாட்டுகிறது. இது தவறான குற்றச்சாட்டு.

நாடாளுமன்றம் முடங்குவதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வுகாணும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், இதை ஏற்க அரசு மறுத்து வருகிறது. பெகாசஸ் விவகாரத்தில் விவாதம் நடத்த மறுத்து பிடிவாதமாகவும் ஆணவப் போக்குடனும் மத்திய அரசு செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x