Last Updated : 05 Aug, 2021 03:16 AM

 

Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

கர்நாடகாவில் 29 அமைச்சர்கள் பதவியேற்பு : எடியூரப்பா மகனுக்கு வாய்ப்பில்லை; துணை முதல்வர் பதவி கிடையாது

கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள், எம்எல்சி-கள் 29 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்த பின், புதியமுதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். கடந்த 2ம் தேதி டெல்லி சென்ற பசவராஜ் பொம்மை, பிரதமர் மோடி உள்ளிட்ட கட்சி மேலிட தலைவர்களுடன் அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

மாகாணம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர பரிசீலனைக்குப் பின் 29 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதல்வர்களாக இருந்த கோவிந்த் கர்ஜோள், ஈஸ்வரப்பா, அஷ்வத் நாராயண், அசோக் ஆகியோர் அமைச்சர்களாக பதவி யேற்றனர். பைரத்தி பசவராஜ், எம்டிபி நாகராஜ், சுதாகர், சோமண்ணா, உமேஷ் கத்தி என மொத்தம் 29 பேருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பசவராஜ் பொம்மை தலைமையிலான இந்த அமைச்சரவையில் லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த 8 பேருக்கும், ஒக்கலிகா வகுப்பைச் சேர்ந்த 7 பேருக்கும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 7 பேருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. கடந்தமுறையைப் போலவே இம்முறையும் சசிகலா ஜொள்ளே என்ற பெண் எம்எல்ஏ ஒருவருக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிருப்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது 3 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்த முறை துணை முதல்வர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் முன்னாள் துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அஷ்வத் நாராயணா, அசோக், கோவிந்த் கர்ஜோள் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கும் வாய்ப்பு வழங்காத தால் எடியூரப்பாவின் ஆதரவாளர் களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ்,மஜதவில் இருந்து பாஜகவுக்கு தாவிய 17 பேரில் பைரத்தி பசவராஜ், சுதாகர், முனிரத்னா, எம்டிபி நாகராஜ் உள்ளிட்டோருக்கு மட்டுமே அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த‌ அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்ட அரவிந்த் லிம்பாவள்ளி, சுரேஷ் குமார் உள்ளிட்டோருக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படாததால் அவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனிடையே பாஜக மூத்த எம்எல்ஏ-க்கள் நேரு ஒலெகர், ஆனந்த் மமணி, அரவிந்த் பெல்லத், சி.பி.யோகேஷ்வர் உள்ளிட்டோருக்கு பதவி கிடைக்காததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமைச் சரவையில் இடம் அளிக்காததை கண்டித்து அவர்களின் ஆதரவாளர் கள் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் நட்டா உள்ளிட்டோரின் ஆலோசனைபடி. கட்சி, ஆட்சியின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை பாஜகவினர் அனை வரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x