Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

ஆன்லைன் ரம்மி தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு - உச்ச நீதிமன்றத்தில் தடை பெற தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தல் :

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம் கொண்டுவரும் வரை, உயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்காலத் தடை பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பப்ஜி, ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் வாழ்வை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

அதிமுக அரசு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து 2020 நவம்பரில் அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. இதற்கு உயர் நீதிமன்றமும் பாராட்டுத் தெரிவித்தது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு ஏப்ரல் மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்து அதிமுக அரசு இயற்றிய சட்டத்தை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த இரு 2 மாதங்களாக மூத்த வழக்கறிஞர்கள், ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக வாதாடும்போது, திமுக அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, முறையாக வாதாடவில்லை என்றே தெரிகிறது.

வாதத்தின்போது மூத்த வழக்கறிஞர்கள், ஜல்லிக்கட்டையும், ஆன்லைன் சூதாட்டத்தையும் ஒப்பிட்டு வாதிட்டனர். இதற்கு எதிரான வாதத்தை அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எடுத்து வைக்காதது விந்தையாக உள்ளது.

இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் திமுகவின் செயலை கண்டிக்கிறேன். தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில்`ஆன்லைன் ரம்மி விளையாட இலவசமாக பதிவு செய்யலாம், உங்கள் கணக்கில் ரூ.5,500 இலவசமாக தருகிறோம்' என்றெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி, ஆசை காட்டுகின்றனர்.

எனவே, இதை தடுக்க உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, இடைக்கால தடை பெறவேண்டும். மேலும், புதிய சட்டம் கொண்டுவரும்வரை, உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x