Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

தமிழக மீனவர்கள் மீதான - இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை அவசியம் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைகடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஒன்பது மீனவர்களும் இந்த தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாக தப்பியுள்ளனர்.

சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றாமல் நம்மீனவர்கள் மீது வன்முறையைபிரயோகிப்பது கண்டனத்துக்குரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும்.

இந்த சம்பவம் தமிழகத்தில், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கை கடற்படை சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையையும் நிகழ்த்தாமல், அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். பல ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வை காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x