Published : 05 Aug 2021 03:18 AM
Last Updated : 05 Aug 2021 03:18 AM

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட்10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 13-ல்தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நாளையுடன் (ஆகஸ்ட் 6) நிறைவு பெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே நடப்பாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் (ஹானர்ஸ்) படிப்புகளுக்கும் நீட் தேர்வை ஒரு தகுதியாக எடுத்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சில கல்லூரிகள், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் சேர்க்கை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதையடுத்து நர்சிங் படிப்புகளில் சேர விரும்புவோரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை http://neet.nta.nic.in மற்றும் https://nta.ac.in/ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x