Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உத்தரவின் பேரில் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள குதிரன் சுரங்கப்பாதை திறக்கப் பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளாவின் பாலக்காடு-திரிச்சூர் நெடுஞ்சாலையில் செல்லும்போது வாளையாறு சோதனைச் சாவடியை கடந்த நிலையில் மன்னூத்தி என்ற பகுதி அமைந்துள்ளது. மலைப்பாங்கான மற்றும் குறுகிய வழிப் பகுதி என்பதால் இந்த வழியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டு வந்தது. மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில் பீச்சி - வாழஹனி வனவிலங்கு சரணாலய பகுதியில் மலையை குடைந்து இரண்டு சுரங்க வழிகளில் (செல்வதற்கும், வருவதற்கும்) சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.
2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வடக்கஞ்சேரி - மன்னூத்தி மார்க்கத்தில் வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் 1.6 கிலோமீட்டர் தூரத்துக்கு 2 சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
தொடக்கத்தில் ரூ.641 கோடிமதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டப் பணிகள் மெதுவாக நடந்தததால் 2019-ல் இத்திட்டப் பணியின் மதிப்பு ரூ.1,300 கோடியாக உயர்ந்தது.
இந்நிலையில் பல்வேறு காரணங்களால் சுரங்கப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஒரு வழியில் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து ஒரு வழி மட்டும் பொதுப் போக்குவரத்துக்காக கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு வழியில் சுரங்கப்பாதையைத் திறக்க மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்தே இந்தப் பாதை திறக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ் நாட்டில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, குதிரன் சுரங்கப்பாதையில் ஒரு வழியைத் திறந்துவிட்டுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT