Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் - அரசு இடஒதுக்கீடு சட்டப்படி 69 சதவீதத்தை அமல்படுத்த முடியுமா? : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மத்திய அரசு இதுவரை அமல்படுத்தவில்லை எனக்கூறி திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் ஆஜராகி, ‘‘மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இதில் நீதிமன்ற அவமதிப்பு எதுவுமில்லை’’ என தெரிவித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் அமல்படுத்துவது குறித்துகுழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்றுதான் உயர் நீ்திமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அந்த உத்தரவை மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை என்பதால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழக அரசின் இடஒதுக்கீட்டை புறக்கணித்துவிட முடியாது எனஉயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பானமத்திய அரசின் குழுவை உச்ச நீதிமன்றமும் அங் கீகரித்துள்ளது’’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்தின் அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியுமா என்றும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்குள் வருகிறதா, இல்லையா எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து, அவமதிப்பு வழக்கில் மத்திய அரசுஉரிய விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x