Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீர்நிலைகளில் குளிக்கத் தடை - கிருஷ்ணகிரி அணைக்கு வந்தவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை :

ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி, நீர்நிலைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள தால் கிருஷ்ணகிரி அணைக்கு வந்தவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். படம்: எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி

ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி நீர்நிலைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று கிருஷ்ணகிரி அணைக்கு வந்தவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஆடிபெருக்குக்கு தினத்தன்று அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடப்பதோடு, நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமணத் தம்பதிகள் நீர் நிலைகளில் பெண்களுக்கு தாலிக்கயிறு மாற்றி இறைவனை வழிபடுவர். தொடர்ந்து 2-வது ஆண்டாக கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளன.

நேற்று ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி, கிருஷ்ணகிரி அணை, ஆவல்நத்தம் கோயில் குளம், தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதி கோயில்களில் புனித நீராடும் பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனிடையே நேற்று குளிப்பதற்காக கிருஷ்ணகிரி அணைக்குச் செல்லாமல் தடுக்க, போலீஸார், ஊர்காவல் படையினர் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அணையில் குளிக்க இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். வழக்கமாக ஆடிப்பெருக்கு விழாவில், கிருஷ்ணகிரி அணையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவது வழக்கம், தற்போது தடையால் வெறிச்சோடி காணப்பட்டது.

இருப்பினும், கிராம மக்கள் மிகக்குறைந்த அளவில் ஆங்காங்கே தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி, கரையில் உள்ள கோயில்களில் பூஜை செய்து வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x