Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM

கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான - ரூ.81 கோடி மதிப்பிலான 16 ஏக்கர் நிலம் மீட்பு :

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில்உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் 700ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலையில்,கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், கோயில் நிர்வாகம் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டதில், 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது. இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க உத்தரவிட்டார்.

இதன்பேரில், முதற்கட்டமாக திருப்போரூர்-நெம்மேலி செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ள 16.23 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணிகளை கோயில் செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில், மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று மேற்கொண்டனர். இதில், நிலத்தை மீட்டு அப்பகுதியில் 'கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம்' என்ற அறிவிப்பு வாசகம் கொண்ட பலகையை அமைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.81 கோடி எனவும் அந்நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளதால், அறுவடைக்குபிறகு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x