Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

ஒரு விஷயத்தின் உண்மை தன்மையை ஆராயாமல் கருத்து கூற வேண்டாம் : நடிகை ஷில்பா ஷெட்டி வேண்டுகோள்

ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதுகுறித்து யாரும் கருத்து கூறாதீர்கள் என்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

வெப் சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா உள்ளிட்ட சிலரை மும்பை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை: ஆம். கடந்த சில நாட்கள் அனைத்துப் பக்கமும் சவால் மிகுந்தவையாக இருந்தன. ஏராளமான வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் வலம் வந்தன. ஊடகங்களாலும், நலம் (என் நலத்தை விரும்பாத) விரும்பிகளாலும் ஆதாரமற்ற தாக்குதல்கள் என் மீது தொடுக்கப்பட்டன. ஏராளமான கேலி, கிண்டல்களும், கேள்விகளும் பதிவு செய்யப்பட்டன. என் மீது மட்டுமின்றி, என் குடும்பத்தினர் மீதும் ஏராளமான புகார்கள் அடுக்கடுக்காக சொல்லப்பட்டன. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தொடர்ந்து இதுகுறித்து எதுவும் நான் கூறப்போவதில்லை.

எனவே, என் மீது தவறான பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும். மீண்டும் சொல்கிறேன். ஒரு நடிகையாக என்னுடைய கொள்கை என்பது என்னவென்றால் யார் மீதும் புகார் சொல்லக் கூடாது; விளக்கம் சொல்லக் கூடாது என்பதாகும்.

நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த வழக்குதொடர்பாக விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. மும்பை போலீஸார் மற்றும் இந்திய நீதித்துறையின் மீதுஎனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு குடும்பமாக, எங்களால இயன்ற அனைத்து சட்டப்பூர்வமான வழிகளையும் முயன்று கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு தாயாக நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது இதுதான், ‘எங்களுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள். ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதுகுறித்து கருத்து கூறாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x