Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்குநிதி ஒதுக்க கோரி முன்னாள் அமைச்சர் வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக் கழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியும், பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரியும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் கடந்த அரசால் ஒத்துக்கப்பட்டுள்ளபோதிலும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் இயங்கி வருவதாகவும், போதிய பணியாளர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

மேலும், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதுகலை மையத்தில், முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது சட்டத்தை மீறிய செயல் என்றும், அந்த அறிவுப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப்பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஜெயலலிதா பல்கலைக்கழக ஆளுகை வரம்புக்குஉட்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையில் ஈடுபட முடியாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கிய பிறகு துணைவேந்தர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், கட்டிடங்களும், அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால் மாணவர்களின் நலன் கருதி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும்,இது தொடர்பாக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிப்பதாகவும் கூறினார்.

அதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஆக. 4-ம் தேதிக்கு (நாளை)தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x