Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

கடந்த ஓராண்டில் மண் கடத்திய 41 வாகனங்கள் பறிமுதல் - செம்மண் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை : கோவை கனிம வளத் துறையினர் தகவல்

கோவையில் செம்மண் எடுக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், கடந்த ஓராண்டில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கனிம வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்டம்சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளின் இயக்கத்தை தடை செய்து கடந்த மார்ச் மாதம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. பின்னர், உரிமம் பெறாத 186 சூளைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளை மின்வாரியம் துண்டித்தது.

அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் முறையான ஆணை இல்லாமல் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சூளைகள் செயல்படுவது குற்றமாகும். அரசின் அனுமதியின்றி செங்கல் சூளைக்கு மண் எடுத்து பயன்படுத்தினால் வருவாய் துறை, காவல் துறை, புவியியல் மற்றும் கனிம வளத் துறை மூலம் வாகன ஓட்டுநர், உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிமம் பெறாத சூளைகளில் இருந்து சுட்ட செங்கற்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதும் குற்றமாகும்" என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 11 வீரபாண்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காளையனூர் பழனிகுட்டை பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு செம்மண் எடுக்கப் பட்டு, டிப்பர் லாரி மூலம் கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது. சம்பவ இடத்துக்கு நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அதில், ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து செம்மண் எடுக்கப்பட்டு வருவதும், பொக்லைன் இயந்திரங்களை இயக்கியது கோவை பன்னிமடையைச் சேர்ந்த லட்சுமணன், தஞ்சாவூர் பேராவூரணியைச் சேர்ந்த வெங்கடேஷ், டிப்பர் லாரியை ஓட்டியது வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் என்பதும் தெரியவந்தது.

முதலில் விவசாயத்துக்கு நிலத்தை சரிசெய்ய மண் எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், தடாகம் காவல்நிலையத்தில் ஒப்படைத்து, புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த தடாகம் காவல்துறையினர், 3 பேரையும் கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், நில உரிமையாளரான ராமச்சந்திரன் தனது சொந்த தேவைக்காக செம்மண் எடுத்தது தெரியவந்தது. அதனால், அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கனிம வளத் துறையினர் கூறும்போது, “கோவையில் மலையிட பாதுகாப்பு ஆணையத்தின் கீழ்வரும் பகுதிகள், இதர பகுதிகள் என எந்த இடத்திலும் செம்மண் எடுக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கனிம வளத் துறையினர், காவல் துறையினர், வருவாய் துறையினர் இணைந்து கடந்த ஓராண்டில் சட்டவிரோதமாக மண் எடுத்துச்சென்ற 41 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x