Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM
சென்னை அடையாற்றின் கரையோரம் வேலி அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஆறுகளில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க கோரிய வழக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னைஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில், மொத்தமுள்ள 24.67 கி.மீ. நீள அடையாற்றின் கரையோரப் பகுதியில் இரு பக்கமும் வேலிகள் அமைக்கப்பட உள்ளன. இதுவரை 9.84 கி.மீ. நீளத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆற்றில் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 891 டன் கட்டுமானக் கழிவுகள், 3 ஆயிரத்து 505 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளன. ஆற்றில் மிதந்து வரும் கழிவுகளை வடிகட்ட கோட்டூர்புரம் பாலம், மறைமலை அடிகள் பாலம், ஜாபர்கான் பேட்டை குறுக்கு பாலம் ஆகிய 3 இடங்களில் நவீன வடிகட்டிகள் அமைக்கப்பட உள்ளன.
கோட்டூர்புரம் அருகில் ஆற்றின்கரையோரம் பூங்கா அமைக்கும் பணி 15 சதவீதம் முடிந்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT