Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

கரோனா பரவலைத் தடுக்க - சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளின்படி 79 சிகிச்சை மையங்கள் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

கரோனா பரவலைத் தடுக்க சித்தமருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளின்படி 79சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிடக்கோரி, சென்னைஉயர் நீதிமன்றத்தில் பி.ஏ.ஜோசப்என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், உடனடி மற்றும் தற்காலிகமாக தீர்வும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் அலோபதி மருந்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய, மாநில அரசுகள்,சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற இந்தியமருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், தற்போது கரோனா இரண்டாவது அலை தணிந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் 64 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் உட்பட இந்திய மருத்துவ முறைகளுக்காக 79 சிகிச்சைமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆரோக்கியம் என்றசிறப்புத் திட்டம் மூலம் சித்த மருத்துவ முறையில் கபசுரக் குடிநீர்,நிலவேம்பு குடிநீர், அமுக்கரா லேகியம் போன்ற எதிர்ப்பு சக்தி மிகுந்த மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதையடுத்து, "சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள் மூலம் கரோனா தடுப்புக்கு போதுமான சிகிச்சை மையங்களை அமைத்து வருவதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே,இந்த வழக்கில் மேற்கொண்டு எந்தஉத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை" என்று கூறி நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x