Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மிதந்த ஆண், பெண் சடலங்கள் மீட்பு : கொலையா? என போலீஸார் விசாரணை

குமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நேற்று மிதந்துவந்த ஆண், பெண் சடலங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து களியக்காவிளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள புதிய மற்றும் பழைய பாலத்துக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் ஆண் உடல்கள் மிதந்து வந்தன. ஆற்றங்கரை ஓரம் நின்ற மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையம் மற்றும் களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் அங்கு வந்த வீரர்கள் ரப்பர் படகு மூலம் சென்று ஆற்றில் மிதந்த இரு சடலங்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆண் சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்திருந்தது. 40 வயது மதிக்கத்தக்க அவர் இறந்து 3 நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் எனத் தெரிகிறது.

மீட்கப்பட்ட பெண்ணின் உடலில்அவர் அணிந்திருந்த முகக்கவசம் கூட கலையாமல் இருந்தது. சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கைப்பையில் 2 புகைப்படம் மற்றும் 10 ரூபாய் கட்டண பேருந்து பயணச் சீட்டு இருந்தது. எனவே, அவர் குழித்துறை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இருவரது சடலங்களையும் போலீஸார் கைப்பற்றி பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஆற்றில் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x