Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

விவசாயிகள், வல்லுநர்களுடன் ஆலோசித்து - வேளாண், பொது பட்ஜெட் தயாரிக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

விவசாயிகள், துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கங்களுடன் கலந்தாலோசித்து மக்களுக்கு பயன்தரும்வகையில் இந்த ஆண்டுக்கானபொது மற்றும் வேளாண் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு இந்த ஆண்டு இரண்டு பட்ஜெட்களை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழக அரசு வரலாற்றில் முதல்முறையாக வழக்கமான பட்ஜெட்டுடன் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்ட உள்ளது.

வேளாண் பட்ஜெட்டை விவசாயிகள், விவசாயநிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரை கலந்தாலோசித்து, விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் உழைப்புக்கேற்ற உரிய பயன்களை பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பொது பட்ஜெட்டை பொருளாதார மற்றும் நிதிநிலைவல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்கம், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை கலந்தாலோசித்து அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் தயாரிக்க வேண்டும். தமிழக மக்கள் வாழ்வில் புதியமறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த பட்ஜெட்டை தயாரிக்க அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கடந்த ஜூன் 21-ம் தேதிதொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆளுநர் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. வேளாண் துறைக்குதனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பும் அதில் இடம் பெற்றிருந்தது. ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பிறகு பேரவைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய அரசின் சார்பில் முழுமையான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக துறைவாரியான ஆய்வுக் கூட்டங்களைமுதல்வர் நடத்தி வருகிறார். பட்ஜெட் தயாரிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x