Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்த - குழந்தைத் தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு :

பொள்ளாச்சி வட்டாட்சியர் அரசகுமார் தலைமையில் தொழிலாளர் துறை, வருவாய் துறை, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மற்றும் சைல்டுலைன் அமைப்பினர், பொள்ளாச்சி பகுதிகளில் 14 கடைகள், நிறுவனங்களை கடந்த 29-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இருவேறு பெட்ரோல் பங்க்கில் குழந்தைத் தொழிலாளர்கள் இருவர் பணியில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை மீட்டு குழந்தைகள் நலக்குழுவில் ஆஜர்படுத்தினர். இரு சிறுவர்களுக்கும் வயதை உறுதிசெய்யும் பொருட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்முடிவுகள் கிடைத்தவுடன் குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது 1986-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் தடுத்தல் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் தொழிலாளர் துறை மூலம் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவர்களின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கி, ஏற்கெனவே சிறுவர்கள் கல்வி பயின்ற பள்ளியிலேயே தொடர்ந்து கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆய்வின்போது, பொள்ளாச்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, சாந்தி, நில வருவாய் ஆய்வாளர் எஸ்.முருகன், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட களஅலுவலர் பிஜீ அலெக்ஸ், சைல்டுலைன் களப்பணியாளர் அஜித் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x