Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் (இ.எஸ்.ஐ.சி.) கோவை சார் மண்டலத்தின் நிர்வாக எல்லையில் திருப்பூர் மாவட்டம் தொடர வேண்டும் என கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை பீளமேட்டில் நடைபெற்ற சங்கத்தின் நிர்வாக குழு கூட்டத்துக்கு, சங்க தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மனோகரன், பொருளாளர் சுப்பையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இ.எஸ்.ஐ. கோவை சார் மண்டலத்தின் நிர்வாக எல்லை வரையறையில் இணைக்கப்பட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேலம் சார் மண்டலத்துடன் இணைப்பதாக அரசு அறிவித்துள்ளது. திருப்பூரில் இருந்து சேலத்துக்கு 200 கி.மீ. வரை தொழிலாளர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், சம்பள இழப்பு, போக்குவரத்து செலவு, அலைச்சல் ஏற்படும். எனவே, திருப்பூரை சேலத்துடன் இணைக்கும் முயற்சியை கைவிட்டு, கோவையிலேயே தொடர இ.எஸ்.ஐ.சி. பொது இயக்குநர் மற்றும் சென்னை மண்டல இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 2,000க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். நாட்டின் நூல் உற்பத்தியில் 45 சதவீதம் தமிழகத்தின் பங்கு இருந்து வருகிறது. ஜவுளித்துறையில் பணிபுரிந்துவரும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. எனவே, பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT