Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM
கோவை: மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆணையர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்து ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். இதில், 23-வது வார்டுக்கு உட்பட்ட பொன்னுரங்கம் சாலையில் தூய்மைப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து சேகரிக்கும் பணி, வாகனங்கள் மூலம் குப்பையை கொண்டு செல்லும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது தூய்மைப் பணியாளர்களிடம், 'குப்பை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். சுகாதாரக் கழிவுகளை தனியாக அப்புறப்படுத்த வேண்டும், ' என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் பேசும்போது, 'பொதுமக்கள் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் குப்பை கொட்ட வேண்டாம். குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பையை கொட்ட வேண்டும். மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT