Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

திறந்தவெளி பல்கலை.யில் நேரடியாக முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு - அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்க முடியாது : உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் நேரடியாக முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 2-ம் நிலை சார் பதிவாளராகப் பணியாற்றும் வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்தசெந்தில்குமார் என்பவர், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல்நிலை சார்பதிவாளராக பதவி உயர்வு வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் அவர் இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக நேரடியாக பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வு வழங்க முடியாது என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரி்த்துள்ளது.

தனி நீதிபதி உத்தரவு

அதை எதிர்த்து செந்தில்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி என்பது, பணி நியமனத்துக்கு தானேயன்றி, பதவி உயர்வுக்கு அல்ல எனக் கூறி செந்தில்குமாருக்கு உரிய பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில்விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் இரா.நீலகண்டனும், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தியும் ஆஜராகி வாதிட்டனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், ‘‘மனுதாரர் இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல் நேரடியாக திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலமாக பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். இதுபோல படித்தவர்களை பணிநியமனத்துக்கோ அல்லது பதவிஉயர்வுக்கோ பரிசீலிக்க முடியாதுஎன உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் நேரடியாக முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுத் துறைகளில் பதவிஉயர்வு வழங்க முடியாது என்பதால் மனுதாரருக்கு பதவி உயர்வுவழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x