Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

பொள்ளாச்சியில் சாலைகளை ஆக்கிரமித்து - கனரக வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் : சார்-ஆட்சியரிடம் தன்னார்வலர்கள் புகார்

பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர். படம்: எஸ்.கோபு

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தன்னார்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்துவது தொடர்பானஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை வகித்தார். சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தணிகைவேல் முன்னிலை வகித்தார்.

வட்டாட்சியர்கள் அரசகுமார், விஜயகுமார், சசிரேகா , வால்பாறை டிஎஸ்பி சீனிவாசன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், டிராபிக் வார்டன் அமைப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்.

போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் பேசும்போது, ‘‘மஞ்சநாயக்கனூர் பிரிவு, பொள்ளாச்சி - உடுமலை சாலை, பொள்ளாச்சி – ஆழியாறு சாலை, பாலாறு ஆஞ்சநேயர் கோயில் பகுதி, வளர்ந்தாயமரம், குள்ளிசெட்டிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்து எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும். ஒளி பிரதிபலிப்பான்கள் பொருத்த வேண்டும். வாகன போக்குவரத்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பலகைகள் ஆங்காங்கே வைக்க வேண் டும்’’ என்றார். இதனை தொடர்ந்து பல்வேறு தன்னார்வலர்கள் தங்கள் கருத்துகளை சார்-ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x