Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

வந்தவாசி பகுதியில் : தொடர் திருட்டில் ஈடுபட்ட : இருவர் குண்டாஸில் கைது :

வந்தவாசி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இருங்கல் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் செந்தமிழ்செல்வன்(29), சென்னை தரமணி கே.பி.கே. நகர் 3-வது தெருவில் வசிப்பவர் மகா கணபதி(26). இவர்கள் 2 பேரும் வந்தவாசி அடுத்த கடம்பை கிராமத்தில் வசிக்கும் சாம்பமூர்த்தியின் வீட்டில் திருட முயன்றபோது, பொதுமக்கள் பிடித்து வடவணக்கம்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வந்தவாசி வடக்கு மற்றும் தெற்கு காவல்நிலையங்கள், தேசூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 21 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களது குற்றச்செயலை தடுக்கும் வகையில், தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து, செந்தமிழ்செல்வன் மற்றும் மகாகணபதியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x