Published : 31 Jul 2021 03:12 AM
Last Updated : 31 Jul 2021 03:12 AM
ஓய்வூதியர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதித் தணிக்கைமுறைகளை வலுப்படுத்தி சிறந்தநிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நிதித் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல்செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், துறைவாரியாக ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்தி வருகிறார். நிதித் துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது.
இதில், நிதித் துறையின் கீழ் செயல்படும் கருவூலம் மற்றும் கணக்குத் துறை, ஓய்வூதியம், உள்ளாட்சி நிதி தணிக்கை, கூட்டுறவு தணிக்கை, துறை தணிக்கை, நிறுவன தணிக்கை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
நிவாரண நிதி விவரம் ஆய்வு
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத் தின் செயல்பாட்டு நிலை, பயனாளிகள் விவரம், சார்நிலை கருவூலங்களின் செயல்பாடுகள், அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். அரசின் வரவு - செலவுதிட்ட நடவடிக்கைகள் மற்றும் வரவு - செலவு திட்டம் தயாரிப் பதில் நவீன முறைகளை கையாளுதல், எளிய மற்றும் பேச்சுவழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு - செலவு திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
தணிக்கை தடை எழக் கூடாது
ஆய்வின்போது, ‘‘நிதித் தணிக்கை முறைகளை வலுப்படுத்தி, தணிக்கை தடைகள் எழாத வகையில் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடர்பான ஓய்வூதியர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், கருவூல கணக்குத் துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், நிதித் துறை சிறப்பு செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், கூடுதல் செயலர் பிரசாந்த் எம்.வடநரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT