Published : 31 Jul 2021 03:13 AM
Last Updated : 31 Jul 2021 03:13 AM
அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மீது போடப்பட்ட 130 அவதூறு வழக்குகளை திரும்ப பெறவும், அனைத்து மேல் நடவடிக்கைகளை கைவிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை அவதூறு பேச்சுகளுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்களான பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (ஆர்எஸ்ஒய்எப்), திமுகவின் கே.என்.நேரு, எஸ்.எம்.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளை கைவிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT