Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM

100 அடியில் தொடரும் பவானிசாகர் அணை நீர்மட்டம் நீர் வரத்து முழுவதும் உபரியாக வெளியேற்றம் :

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 100 அடியில் நீடிக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி, அணைக்கான நீர்வரத்து முழுவதும் பாசனம் மற்றும் உபரி நீராக திறந்து விடப்படுகிறது.

பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரால், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 25-ம் தேதி 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால், அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 1300 கனஅடியாக குறைந்தது. இதனால், உபரி நீர் வெளியேற்றமும் குறைந்தது. தற்போது இரவு மற்றும் காலை நேரங்களில் 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வரத்து இருக்கும் நிலையில், பகல் நேரங்களில் இது பாதியாக குறைந்து வருகிறது.

நேற்று காலை 9 மணிக்கு அணைக்கு விநாடிக்கு 3213 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், மாலை 6 மணிக்கு இது 1427 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 800 கன அடி, ஆற்றில் 530 கனஅடி நீர் என 1330 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியாக நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x