Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு கேரளா விரைகிறது : சனி, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 6 பேர் கொண்ட மத்திய குழு கேரளா விரைகிறது.

கடந்த சில தினங்களாக, நாடு முழுவதும் தினசரி பதிவாகும் புதிய கரோனா நோயாளிகளில் 50 சதவீதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சராசரியாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தினமும் தொற்று உறுதி செய்யப்படுகிறது. பரிசோதனை செய்யப்படுவோரில் சராசரியாக 12.93 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி ஆகிறது. குறிப்பாக 6 மாவட்டங்களில் அதிக பாதிப்பு காணப்படுகிறது.

கேரளாவில் இப்போது 1.54 லட்சம் பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரில் 37.1 சதவீதம் ஆகும். இந்நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்த சனி, ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறும்போது, “கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மாநில அரசுக்கு உதவுவதற்காக 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அங்கு அனுப்பி வைக்கப்படும். இக்குழுவுக்கு தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் தலைமை தாங்குவார்” என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x