Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

பயிர்க் காப்பீட்டு திட்டத்துக்கான பிரீமியத்தில் - மத்திய அரசின் பங்கை பழைய முறைப்படி மாற்ற வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுக்கான கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடியே 49 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தோமர் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வேளாண் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சாகுபடி பரப்பை அதிகரித்தல், ஒருமுறைக்கு மேல் சாகுபடி செய்யும் பரப்பை இரட்டிப்பாக்குதல், உணவு தானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகிய 3 தொலைநோக்குப் பார்வையுடன் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தமிழகம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரியமுயற்சிகளால் காப்பீடு செய்யப்பட்ட பரப்பும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசின் காப்பீட்டு மானியம் 28.07 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2016-17-ல் இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு 49 சதவீதம், மாநில அரசின் பங்கு 49 சதவீதம் மற்றும் விவசாயிகளின் பங்கானது 2 சதவீதம் என்று இருந்தது.தற்போது காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்கை49 சதவீதத்தில் இருந்து பாசனப் பகுதிகளுக்கு 25 சதவீதமாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 சதவீதமாகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மாநில அரசின் பங்கு 12 சதவீதம் அதிகரித்து 61 சதவீதமாக ஆகியுள்ளது. இதனால், 2016-17 ல் ரூ.566 கோடியாக இருந்தமாநில அரசின் பங்கு, 2020-21-ல்ரூ.1,918 கோடியாக, அதாவது 239சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் இந்த தொகை ரூ.2,500 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலத்தின் நிதிச்சுமை அதிகரித்து வரும் நிலையில், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளது. இயற்கை இடர்களின்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கை, இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளது. கரோனா பெருந்தொற்றால் தற்போது நிதி நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், காப்பீட்டுத் தொகையை மாநில அரசு தாங்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீட்டு கட்டணத்தில் ஏற்கெனவே இருந்ததுபோல், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கை முறையே 49:49:2 என்றவிகிதத்தில் உடனடியாக மாற்றிஅமைக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x