Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் - மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கவனிப்பு, மீட்பு மையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்

சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று திறந்து வைத்து, ஆதரவற்றோர் மன நோயாளிகளுக்கான மீட்பு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். படம்: ம.பிரபு

சென்னை

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 50 படுக்கை வசதிகளுடன் கூடிய அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்துவைத்தார்.

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில், தேசிய நல குழுமத்துடன் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 50 படுக்கைகளுடன் கூடிய அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று மையத்தை திறந்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு சிகிச்சை அளிக்க ஏதுவாக 6 மீட்பு வாகனங்களின் சேவையை தொடங்கிவைத்தார். பின்னர் அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, காற்றிலிருந்து நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிலையத்தை பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமையும் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

சென்னையில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்கி பயனடைய 55 சிறப்பு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தற்போது 1,613 நபர்கள் தங்கியுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கென 2 பெண்கள் காப்பகங்கள், 3 ஆண்கள் காப்பகங்கள் என மொத்தம் 5 காப்பகங்கள் உள்ளன. அவற்றில் 213 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 3 காப்பகங்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 50 படுக்கைகளுடன் கூடிய அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் 3 மனநல மருத்துவர்கள், ஒரு உளவியல் ஆலோசகர், 15 செவிலியர்கள், 2 பணியாளர்கள், ஒரு மருந்தாளுநர், 2 பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சிஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு மைய இயக்குநர் தாரேஸ் அகமது, ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.ஜெ.எபினேசர், மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.மனீஷ், எம்.எஸ்.பிரசாந்த், டி.சினேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x