Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

சோழவரம் அருகே ரவுடி கொலை : இருவர் போலீஸில் சரண் :

சோழவரம் அருகே ரவுடி ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், நல்லூரில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பின்புறம் உள்ள முட்புதரில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக நேற்று காலை சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, அங்கு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து, திருவள்ளூர் எஸ்பி வருண்குமார், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர்.

பல்வேறு வழக்குகளில் தொடர்பு

அவ்விசாரணையில், அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த அந்த இளைஞர், சென்னை, புழல் காவாங்கரையை சேர்ந்த சண்முகப்பாண்டியன்(26) என்பதும், அவர் மீது சோழவரம், செங்குன்றம் காவல் நிலையங்களின் கஞ்சா கடத்தல், அடிதடி உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

சண்முகப்பாண்டியனின் உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேதப் ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரணடைந்தோரிடம் விசாரணை

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சண்முகப்பாண்டியன் கொலை தொடர்பாக செங்குன்றம் அருகே உள்ள மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டன்(26), முருகன்(26) ஆகியோர் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x