Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

புதுச்சேரி பகுதியில் கடல் நீரின் தன்மையை அறிய - அதிநவீன கருவிகள் அடங்கிய மிதவை கடலில் அமைப்பு :

புதுச்சேரி பகுதியில் கடல் நீரின் தன்மையை அறிய அதிநவீன கருவிகள் அடங்கிய மிதவை கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சூழியல் சார் விவரங்களை இணையத்தில் மட்டுமில்லாமல் செல்போனிலும் விரைவில் அறியலாம்.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (nccr) கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இம்மையத்தின் சார்பில் புதுச்சேரியில் கடல் நீரின் தன்மையை அறிய அதிநவீன கருவிகள் பொருத்திய மிதவையை புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கடலில் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டம் நேற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

புதுச்சேரி கடலில் நிறுவப்பட்டுள்ள மிதவையில் இருந்து பெறப்படும் தகவல்களை தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் இணையத்தின் வாயிலாக முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார்.

இதுதொடர்பாக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை இயக்குநர் தினேஷ் கண்ணன் கூறுகையில், "கிழக்கு கடற்கரையில் கடல் நீரின் தன்மையை அறிய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் ஏற்கெனவே இந்த மிதவை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இரண்டாவது மிதவை அமைக்கப்பட்டுள்ளது.

10 நிமிடங்களுக்குஒருமுறை தகவல்

கடல் நீரின் தரம், காற்றின் தன்மை உட்பட பல விஷயங்களை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த மிதவை நமக்குத் தரும். அதை தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இணையத்தில் பார்வையிடலாம். அத்துடன் கடல் நீரின் தரத்தை வண்ணங்கள் மூலம் அறியும் வசதியுண்டு. பச்சை நிறத்தில் இருந்தால் அது சரியாக உள்ளதாக அர்த்தம். வெவ்வேறு வகை வண்ணங்கள் மாறி சிவப்பு நிறத்தில் இருந்தால் தரம் குறைந்துள்ளதாக அறியலாம்.

இத்தகவல்கள் மூலம் மீனவர்களுக்கான தண்ணீரின் ஓட்டம், காற்றின் தன்மை, மீன்கள் இருக்கும் இடம் ஆகியவற்றையும் அறியலாம். சுற்றுலா பயணிகளுக்கும் இம்மிதவை தகவல்களால் பலன் உண்டு. இது நடைமுறைக்கு வர சில காலம் ஆகும். கடல் நீரின் தரமாக உள்ளதா என அறிந்து சுற்றுலா பயணிகள் கடற்கரையில் இறங்கலாம். இதை ‘மொபைல் அப்ளிகேஷன்’ மூலம் அறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சென்னையில் சில இடங்களில் கடல் நீரின் தரம் சிவப்பு வண்ணத்தை காட்டுவதை இணைய பக்கத்திலேயே அறிய முடியும். இந்த மிதவை புதுச்சேரியில் துறைமுகத்தில் மிதவை உள்ள பகுதியிலிருந்து 2 கிமீ தொலைவு வரை தற்போது தகவல்களைத் தரும். தற்போது நாங்கள் கடல் நீரை எடுத்து பரிசோதித்து வரும் முடிவுகளையும், மிதவை தரும் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்ப்போம். குறிப்பிட்ட காலம் வரை முடிவுகள் சரியாக இருந்தால் இத்தகவல்களை மக்கள் அறிய வெளியிடத் தொடங்குவோம். இதன் மூலம் கிழக்கு கடற்கரையில் குளிக்கும் தரம் கடலில் எங்குள்ளது என்பதை அறியலாம்" என்று தெரிவித்தார்.

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, “மிதவை பயன்பாட்டுக்கு வரும் போது 10 கிமீ தொலைவு வரை தண்ணீரில் ஆக்சிஜன் அளவு, தண்ணீரின் தட்பவெட்பம், கடல் நீரோட்டம் என பல தகவல்களை பெற முடியும். கடலில் கழிவுநீர் கலக்கும் அளவை அறிந்து, அதை தடுக்க முடியும்.

தற்போது மிதவையில் இருந்து தகவல் வருகிறது. சென்னையை விட புதுச்சேரியில் கடல் நீர் தூய்மையாக உள்ளது.

செப்டம்பருக்குப் பின் விசாகப்பட்டினம், லட்சத் தீவுகளில் இம்மிதவையை அமைக்க உள்ளோம். 75,000 கி.மீ உடைய கிழக்கு கடற்கரையில் தற்போது 22 இடங்களில் நாங்கள் கடல் நீரை ஆட்கள் மூலம் சேகரித்து, பரிசோதித்து வருகிறோம்." என்று தெரிவித்தனர்.

கடல் நீரின் தரம், காற்றின் தன்மை உட்பட பல விஷயங்களை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த மிதவை நமக்குத் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x