Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

அமைச்சர் என்பதற்காக சலுகை வழங்க முடியாது - செந்தில்பாலாஜி ஆக.6-ல் நேரில் ஆஜராக வேண்டும் : மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

அதிமுக ஆட்சியின்போது அரசுபோக்குவரத்து கழகத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆகஸ்ட் 6-ம் தேதிநேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் என்பதற்காக சிறப்பு சலுகை வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-15 அதிமுக ஆட்சியின்போது, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தேவசகாயம், கணேஷ்குமார், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. செந்தில்பாலாஜி தற்போது திமுக அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு நேற்று நடந்தது. அப்போது, ‘‘செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் ஏற்கெனவே சோதனை நடத்தப்பட்டு, மோசடியில் ஈடுபட்ட காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் வாங்கியதற்கான ரசீதுகள், நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

செந்தில்பாலாஜி உட்பட மோசடியில் ஈடுபட்ட 47 பேருக்கு எதிராக 6 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அனைவருக்கும் அதன் நகல் வழங்கப்பட்டுள்ளது’’ என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 17-ம்தேதி தொடங்கும். வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்வதாக இருந்தால், ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து விசாரணையை இழுத்தடிக்க கூடாது, 47 பேரும் ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

மேலும், ‘‘இதே விவகாரம் தொடர்பாக அருள்மணி என்பவர்கொடுத்த புகாரில், அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள்பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக, செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேரும், வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அமைச்சர்என்பதற்காக சிறப்பு சலுகை எதுவும் வழங்க முடியாது’’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x