Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க - ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்ற வணிகர்கள் :

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க, ஆட்சியர் முன்னிலையில் வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா பொருட்களின் விற்பனையை தடுப்பது தொடர்பாக, வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து பேசியதாவது:

பான்மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை போன்ற நிகோடின் கொண்ட பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் கூடாது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட எல்லைகளில், அனைத்து வாகனங்களும் காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அத்தியவாசியப் பொருட்களில் மறைத்து, குட்கா பொருட்களை கடத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். பறக்கும் படையினரும் கண்காணித்து வருகின்றனர்.

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதை உணர்வதுடன், அனைத்து வியாபாரிகளும் விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, புகையிலைப் பொருட் களின் விற்பனையைத் தடுக்க, வணிகர் சங்க பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கைகளை நீட்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x