Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM
உடுமலை: உடுமலையை அடுத்த மடத்துக்குளம் வட்டாரத்தில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் பல அரசின் அனுமதியோடும், அனுமதியின்றியும் இயங்குகின்றன. இதற்கிடையே தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் சைஸ் கல், சம்மட்டி கல், ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் அங்குள்ள குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள சாலைகளை பயன்படுத்துவதால், புழுதி வாரி தூற்றப்படுவதாகவும், அதனால் கிராம மக்கள் சுவாசக்கோளாறால் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை அவ்வழியாக சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செங்கழனிபுதூர் கிராம மக்கள் கூறும்போது, "பல ஆண்டுகளாகவே கல்குவாரி லாரிகளால் பொதுமக்களுக்கு தொல்லை அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் லாரிகளுக்கு முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்" என்றனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT