Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM
மதுரை: திருச்சி காஜா நகரைச் சேர்ந்த ஹாபில், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி மஜ்லிஸுல் உலமா சங்கம், விதிப்படி பதிவு செய்யப்பட்டது. அதில் நான் பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கத்துக்குச் சொந்தமாக திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன.
சங்கத் தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிட எனக்கு தகுதியுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு படிவம் கேட்டேன். எனக்கு வேட்புமனு படிவம் வழங்க மறுத்துவிட்டனர்.
முறையாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு பதில், ஏற்கெனவே நிர்வாகிகளை தேர்வு செய்து, பின்னர் கண்துடைப்பாக தேர்தல் நடத்துவது போல் உள்ளது. இதனால் திருச்சி மஜ்லிஸுல் உலமா சங்கத் தேர்தலுக்கு தடை விதித்து, தேர்தல் நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, போட்டியிட தயாராக உள்ள அனைவருக்கும் வேட்புமனு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், திருச்சி மஜ்லிஸுல் உலமா சங்கத் தேர்தலுக்கு தடை விதித்து, மனு தொடர்பாக திருச்சி மாவட்ட சங்கங்களின் பதிவாளர், திருச்சி மஜ்லிஸுல் உலமா சங்க பொதுச் செயலர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT