Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM
செய்யாறு அருகே வடதண்டலம் கிராமத்தில் ரூ.35 லட்சத்தில் ஏரியை சீரமைத்தும் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை என விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வடதண்டலம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மதகு பழுதடைந்து தண்ணீர் வெளியேறியதால், ஏரியில் தண் ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை இருந்தது. இது குறித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி சீரமைக்கும் பணி கடந்தாண்டு நடைபெற்றது. ஏரியை ஆழப்படுத்துதல், கரையை பலப்படுத்துதல், மதகு புதுப்பித்தல் மற்றும் நீர்வரத்துக் கால்வாயை தூர் வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், மதகு பொருத்தும் பணி முழுமை பெறாததால், ஏரியில் வழக்கம்போல் தண்ணீரை சேமிக்க முடியவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “எங்களது கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு ஏரியை சீரமைக்கும் பணியை தொடங்கியபோது மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், பிரதான பணியான மதகு புதுப்பிக்கும் பணி முழுமை பெறாததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற போது, பொதுப்பணித் துறையினர் உரிய ஆய்வு செய்யவில்லை. இதனால், கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து இருந்தும், அதனை சேமிக்க முடியவில்லை. மதகு வழியாக வழக்கம்போல் தண்ணீர் வெளியேறுகிறது.
விவசாய சாகுபடிக்கு 2 மாதங்கள் பயன்படுத்தக்கூடிய மழைநீர், யாருக்கும் பயன் இல் லாமல் வெளியேறிவிட்டது. மதகை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT