Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் - ஓபிசி பிரிவினர் இடஒதுக்கீடு குறித்துமத்திய அரசு பதில் தர ஒரு வாரம் அவகாசம் :

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) உரிய இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுகஉள்ளிட்ட கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22 கல்வி ஆண்டு முதல் அந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை அகில இந்திய ஒதுக்கீட்டில் அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை என்றுகூறி திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 2021-22 கல்வி ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் முடிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய, ஒரு வாரம் அவகாசம் தேவை’’ என்று கோரினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x