Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

இரண்டாம் நிலை காவலருக்கான உடல்தகுதித் தேர்வு தொடக்கம் : டிஐஜி-க்கள் நேரில் ஆய்வு

தருமபுரியில், இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களுக்கு நேற்று உடல்தகுதித் தேர்வு தொடங்கியது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் வெற்றி பெற்ற தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 999 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 4257 பேருக்கு நேற்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதித் தேர்வு தொடங்கியது. தருமபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை வளாகத்தில் இந்த தேர்வு நடந்து வருகிறது. நேற்றைய தேர்வில் கலந்து கொள்ள 500 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 392 பேர் மட்டுமே நேற்றைய தேர்வில் பங்கேற்றனர். இந்த விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் எடை, உயரம், மார்பளவு, 1500 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட உடல்தகுதி காண் தேர்வுகள் நடத்தப்பட்டது. இப்பணிகளில் காவல்துறையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

பணிகளை சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயலட்சுமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆகஸ்ட் 5-ம் தேதி வரை இந்த உடல்தகுதித் தேர்வு நடக்க உள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x